| World Environment Day |
|
|
| Written by Avainayagan |
|
கோவை ஓசை சுற்றுச்சூழல் அமைப்பும் அரசு அருங்காட்சியகமும் இணைந்து உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி கோவையின் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாப்போம் என்ற தொடர் செயல்பாட்டின் தொடக்க நிகழ்ச்சியை (05.06.10) அன்று காலை 10:00 மணிக்கு கோவை அரசு அருங்காட்சியகத்தில் நடத்தியது. இதில் பேரூர் ஆதீனம் இளைய சந்நிதானம் மருதாசல அடிகளார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 3000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது நமது கொங்கு நிலப்பகுதி. உரோமாபுரியின் சீசர் மன்னர்கள் காலத்திலேயே கடல் வணிகம் நடத்தியவர்கள் நம் தமிழர்கள். அம்மன்னர்களின் காசுகளை இன்றும் கொங்குப் பகுதிகளில் நடக்கும் அகழ்வாய்வுகளில் காண முடிகிறது. சோழநாடு சோறு தந்தது; பாண்டிய நாடு முத்துகளைத் தந்தது. நம் சேர நாடு பசுக் கூட்டங்களைத் தந்தது. ஆனால், இன்றைக்குப் பசுவளர்க்கும் சூழலை உருவாக்கும் மேய்ச்சல் நிலங்கள் அருகி வருகின்றன. கிராமப்புற விளைநிலங்கள் எல்லாம் குடியிருப்புகளாக மாறிவருகின்றன. பவானி, நொய்யல், அமராவதி ஆகிய கொங்கு நதிகள் பாசனத்திற்குப் பயனாகிக் காவிரியுடன் கலக்கின்றன. குறிப்பாக நொய்யல் நதியில் 32 சிற்றணைகள் உருவாக்கப் பட்டு வளம் பெருகியிருந்தது ஒரு காலத்தில். ஆனால், இந்த நதிகளை எல்லாம் நம் தேவைக்காக முறைகேடாகப் பயன்படுத்தி நாசம் செய்து வருகிறோம். செயற்கை உரங்களை அதிகமாகப் பயன்படுத்தி நம் விளைநிலங்களை நஞ்சாக்கி விட்டோம். கோயில்கள், தல மரங்கள் என்ற பெயரில் மரங்களை வளர்த்துக் காத்தன. புளியமரத் தோட்டம், நந்தவனத் தோட்டம் என்றெல்லாம் மரங்களின் பெயரில் நிலப்பகுதிகள் அழைக்கப்பட்டன. இவற்றை மெல்ல மெல்ல நாம் இழந்து வருகிறோம். பிளாஸ்டிக் பயன்பாடு அதிக அளவில் இருப்பதைக் காண்கிறேhம். இவை தவிர்க்கப் பட்டால் ஒழிய சுற்றுச்சூழலை நாம் காப்பாற்ற முடியாது. தேவைக்கு அதிகமான உடைகளை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதனைக் குறைத்துக் கொள்வது நல்லது. சுற்றுப் புறத்தைக் காப்பாற்றுவது மட்டுமன்றி நம் அகச் சூழலுக்கு அடையாளமாக விளங்கும் அன்புடைமை, பணிவுடைமை, ஒழுக்க முடைமை போன்றவற்றையும் கடைப் பிடித்துக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் உரையாற்றினார். நிகழ்ச்சியில் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோ.அ.முருகவேல் வரவேற்றார். ஓசை சூற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் க.காளிதாசன் நிகழ்ச்சியின் தொடக்கவுரையாற்றினார். பேரூர் ஜெயராமன் வாழ்த்துரை வழங்கினார். ஓசை அமைப்பாளர் தமிழ்மறை நன்றி கூறினார். நிகழ்ச்சியை அவைநாயகன், கணேஷ், தேன்முருகக்கனி, அசோகன் உள்ளிட்ட ஓசை அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். சூற்றுச்சூழல் ஆர்வலர்கள், பள்ளி, கல்லுரி ஆசிரியிர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். |
Water Footprint Network
இயற்கை காக்கும் எமது பணிகளில் நீங்களும் பங்கேற்கலாம்